Sunday, November 10, 2013

[Message] - எது தியானம் ? (What is Meditation ?)

எது தியானம்?

ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி நிற்கிறது தியானம்.

தியானத்திற்குரிய தேவைகள்:

காலம்: அதிகாலையில் 4லிருந்து 6வரை தியானத்தை அப்பியசியுங்கள். இதுவே தியானத்தைப் பயிலுவதற்கான சிறந்த காலம். சிறிதும் தொந்தரவின்றி உங்கள் மனம் பரிசுத்தமாக இருக்கும் பகல் அல்லது இரவின் அப்பகுதியையே தேர்ந்தெடுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன் நீங்கள் தியானத்தில் அமரலாம். இந்நேரத்தில் மனம் அமைதியுடன் இருக்கும். ஞாயிறு நாட்கள் விடுமுறை நாட்களாதலால் மனம் சுதந்திரமாக இருக்கும். அன்று நீங்கள் நன்கு தியானத்தில் ஈடுபடமுடியும். ஞாயிறு நாட்களில் தீவிர தியானத்தில் ஈடுபடுங்கள். பால் பழங்களை மட்டும் உணவாகக் கொள்வதாலோ, உபவாசத்தை மேற்கொள்வதாலோ நல்ல தியானம் ஏற்படும். சதா உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி தியானத்தினால் பெரும் பயனை அடையுங்கள்.

இடம்: உத்தரகாசி, ரிஷீகேசம், பத்திரிநாராயணன் முதலிய ஆத்மீகச் சூழ்நிலைகள் ஓங்கி நிற்கும் ஏகாந்தமானதும் குளுமையானதுமானதோர் இடம் மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இன்றியமையாதது. எங்ஙனம் நீரில் உப்பு கரைந்து ஒன்றாகிறதோ, அதே போல் தன் அதிர்ஷ்டானமான பிரம்மத்தில், தியானாவஸ்தையிலுள்ள மௌன நிலையில், சாத்துவிக மனம் கரைந்து ஒன்றாகிறது. தனிமையும் தீவிர தியானமும் ஆத்மானுபூதிக்கான இரு முக்கிய தேவைகள், கங்கை அல்லது நர்மதையின் தீரம், இமாலயத் தோற்றம், அழகிய பூந்தோட்டம், புனிதக் கோவில்கள்-இவையே ஒன்றித்தல், தியானத்தில் மனதை உயர்த்தும் இடங்கள். இவ்வரிய இடத்தையே உங்கள் இருப்பிடமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசனம்: சித்தாசனம் அல்லது பத்மாசனம் சரீரத்தை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. பந்தனங்களும் முத்திரைகளும் உடலை உரப்படுத்துகின்றன. பிராணாயாமம் காயத்தை லேசாக்குகிறது. நாடிசுத்தி மனஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இவ்வரிய தகுதிகளைப் பெற்றதும், பிரம்மனிடம் மனதைப் பதியவையுங்கள். அப்பொழுதுதான் தியானம் இலகுவாகவும் சந்தோஷமாகவும் தொடர்ந்து நிற்கும்.


* முகநூலில் இருந்து பகிரப்பட்டது.

No comments: